வீடுகளில் உள்ள தண்ணீர் ஏற்றும் மோட்டார்களை திருடி வந்த நபர் ஒருவரை நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான விசேட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதோடு ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான ஆறு தண்ணீர் மோட்டார்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மஹா சல்வகே சஞ்சய ஹர்சத சில்வா (22 வயது) என்பவரே கந்தவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபராவார். இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,
சந்தேக நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவராவார். கந்தவளை, கட்டானை, வெலிஹேன ஆகிய பிரதேசங்களில்
உள்ள வீடுகளில் தண்ணீர் மோட்டார்களை திருடி அதே பிரதேசங்களில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் அந்த பணத்தைக் கொண்டு போதைப் பொருள் பாவித்து வந்துள்ளார்.
சந்தேக நபர் இரவு மற்றும் பகல் வேளைகளில் மோட்டார்களை திருடியுள்ளார். இரவு வேளையில் வீட்டிலுள்ளவர்கள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது தண்ணீர் மோட்டார்களை திருடியதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment