Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 9, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பழிவாங்குகிறார். - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பலிவாங்குகிறார். பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியாக அவர் இருப்பார். நான் பாராளுமன்றம் செல்வேன். இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைப் பதவியை கேட்டபோது மகிழ்ச்சியுடன் நான் அதனை விட்டுக் கொடுத்தேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் கடந்த வெள்ளிக்கிழமை  (7) மாலை  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்; தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதி அமைச்சர்களான சரத்குமார குணரத்ன , சுதர்சனி பெர்னாந்து புள்ளே, பீலிக்ஸ் பெரேரா, திஸ்ஸ வித்தாரண, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

      முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,



 கடந்த ஜனாதிபதி தேர்தலில்; வடக்கு கிழக்கு முடிவுகள்   வெளிவந்து கொண்டிருக்கும் போதே எனது தோல்வியை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினேன். பின்னர் எமது கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைப் பதவியை கேட்டபோது மகிழ்ச்சியுடன் நான் அதனை விட்டுக் கொடுத்தேன். இன்று சிலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியுள்ளனர். அவர்கள் அந்தக் கட்சியுடன் இணைந்து கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போவதாக கூறுகின்றனர். தேசிய அரசாங்கம் அல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கமே உருவாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலிவாங்கும் படலத்தையே மேற்கொள்கிறார். அதற்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இன்று அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். மேசன் வேலை செய்பவர்கள் முதல் இன்ஜினியர்கள் வரை தொழில் இழந்துள்ளனர். நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலின் பின்னர் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.   எமது ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். தனியார் துறை ஊழியர்களுக்கு  மூவாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.
இன்று எனக்கெதிராக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையே அவர்கள் குறிவைத்துள்ளனர். என்மேல் உள்ள பயமே இதற்குக் காரணமாகும் என்றார்.


































No comments:

Post a Comment