மேல் மாகாண சுகாதார அமைச்சு நீர்கொழும்பு மாவட்ட
வைத்தியசாலையின் ஆபத்தான நிலையில் உள்ள ஏழு மாடிக் கட்டிடம் தொடர்பாக ஆரோக்கியமான
நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையேல் நீர்கொழும்பு வைத்தியசாலை பொது மக்களுக்கு வழங்கும் வைத்திய சேவையில் வீழ்ச்சி ஏற்படுவதை
தவிர்க்க முடியாது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலின் சொய்ஸா தெரிவித்தார்.
நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டின் போதே அவர் மேற் சொன்னவாறு
தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய
அதிகாரி சம்பா அளுத்வீர, அரச வைத்திய அதிகாரிகள்
சங்கத்தின் நீர்கொழும்பு பிரிவின் இணைச் செயலாளர்களாக வைத்தியர்களான ரவி சில்வா,
சஜீவ குமார சிங்க
ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலின் சொய்ஸா அங்கு தொடர்ந்து
கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
நோயாளிகள் பாதமிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது.
அதேபோன்று நோயாளிகளுக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் இடையில்
பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் இடமளிக்க முடியாது. நோயாளிகள் சேவையை எதிர்ப்பார்த்தே
இங்கு வருகின்றனர். சகல வைத்தியர்களையும் பாதுகாக்கவும் நோயாளிகளுக்கு சேவை
வழங்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த பிரச்சனை தொடர்பில் குறுகிய, மத்திய, நீண்ட கால வேலைத்திட்டங்களை
நாங்கள் வைத்திய அதிகாரியுடன் கலந்துரையாடியுள்ளோம். அரசியல்வாதிகள் இந்த விடயம்
தொடர்பாக ஆரோக்கியமான முறையில் நடவடிக்கை எடுக்காதது கவலை தருகிறது. பொலிஸ்மா
அதிபருக்கு வைத்தியசாலையில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு
வழங்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் முறைப்பாடு செய்துள்ள போதும் இதுவரை
பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டிடம் தொடர்பான
பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சம்பா
அளுத்வீர ஊடகங்களுக்கு தெரிவி;க்கையில்,
ஏழு மாடிக் கட்டிடத்தின் பரிசோதனை நடவடிக்கை
ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்னர் வைத்தியசாலை நிருவாகம்,
ஊடகங்கள்,
பொது மக்கள் எடுத்த
நடவடிக்கையின் விளைவே இந்த ஆய்வு நடவடிக்கையாகும். தற்போது, ஏழு மாடிக் கட்டிடத்தில்
எந்தவித வைத்திய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவசர சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் பழைய
வார்டில் இடம்பெறுகின்றன. கடுமையான நோயாளிகள் ராகமை, கொழும்பு தேசிய
வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் மூலமாக
அனுப்பப்படுகின்றனர். ஜெய்க்கா நிறுவனம் 900 மில்லியன் ரூபா செலவில் எமது
வைத்தியசாலைக்கு கட்டிடம் ஒன்றை நிருமாணிக்க தீர்மானித்துள்ளது. அதற்கு சில காலம்
எடுக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment