நீர்கொழும்பு, கட்டானை, கட்டுநாயக்க மற்றும்
ரத்தொழுகமை பொலிஸ் அதிகாரத்திற்கட்பட்ட பிரதேசங்களில் தொழிலுக்கு செல்லும் மற்றும்
பாதையில் பயணிக்கும் பெண்களின் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய தங்க நகைகளைப்
பறித்த 'கியர் தொலஹ' எனப்படும் நபர் ரத்தொழுகமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாகொன்னை பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக்க சமிந்த ('கியர் தொலஹ' என்ற பெயரில் அழைக்கப்படுபவர்)
என்ற 38 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களிலும் காலை வேளையிலும் இரவு வேளையிலும்
தொழிலுக்கு செல்லும் மற்றும் பாதையில் பயணிக்கும் பெண்களின் தங்கச்சங்கிலிகளையும்,
வளையலகளையும் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் அதிவேக மோட்டார் சைக்கிளில் சென்று
பறித்துள்ளதுடன் , அந்த மொட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி பல்வேறு பிரதேசங்களிலும் சட்ட விரோத மதுபானத்தை
விநியோகித்ததும் வந்துள்ளமை விசாரணைகளின்போது
தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி
அடகு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய நகைகளை மீட்க விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு மேலதிக நீதவான் இன்று (8) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ரத்தொழுகமை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ந்ந்தலால் பத்மநாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர்
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment